சென்னை கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. பொதுவாக வார இறுதி நாட்களில் இங்கு ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரவு முழுவதும் இளைஞர்கள் உற்சாகமாக இருப்பர். அவ்வாறு இன்று வார விடுமுறையை ஒட்டி, நேற்றிரவு இந்த பாரில், இளம் ஆண்கள், பெண்கள் பலர் கூடினர்.
இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் சென்ற நிலையில், இதில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் நடனமாடிய போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறிய நிலையில்,
அந்த இளம் பெண் பாரை விட்டு வெளியேறி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாரில் இருந்த ஒரு காரை எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் அப்பெண்ணை துரத்தியுள்ளது. அந்த பெண்ணும் முடிந்த அளவு இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்ல, ஒரு கட்டத்தில் அந்த கும்பல் காரால் அப்பெண்ணின் வாகனத்தை மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற சிறுமி படுகாயமடைந்து உள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மரணமடைந்த அந்த இளம்பெண் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காரை கொண்டு மோதி விபத்து ஏற்படுத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
