இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையுமான ஹர்மன்ப்ரீத் கவுர், டி20 சர்வதேச போட்டிகளில் 4,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
https://x.com/BCCIWomen/status/2060754329754370092?
நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது, தனது 4,000 ஆவது ரன்னை எடுத்ததன் மூலம், சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 3-வது வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 4-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நியூசிலாந்தின் சூசி பெயிட்ஸ் (4,720 ரன்கள்) இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்க, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (4,325 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்), டி20 போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரராக ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி (2022-ல்), ரோஹித் சர்மா (2024-ல்) மற்றும் ஸ்மிருதி மந்தனா (2025-ல்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.
தற்போது இந்திய வீரர்களின் ரன் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திலும், ரோஹித் சர்மா (4,231) மற்றும் விராட் கோலி (4,188) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். 37 வயதான ஹர்மன்ப்ரீத் கவுர், தனது 196-வது போட்டியில் 4,001 ரன்களைக் கடந்து இந்த வரலாற்றுப் பட்டியலில் இணைந்து இந்திய கிரிக்கெட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
