தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய கௌரவம் அளிக்கும் வகையிலும், அதை அவமதிப்பதைத் தடுக்கும் நோக்கத்திலும், ‘தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026’ மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) அறிமுகப்படுத்தப்பட்டது.

1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ, அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டுமான தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக அமலுக்கு வரும். இதற்கிடையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version