தமிழ்நாட்டில் காலியாக உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்குச் சரண்டர் செய்யக் கோரும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கும், அரசு மருத்துவர்களுக்கும் பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போதைய புதிய அரசின் முறையற்ற வாதங்கள் மற்றும் மெத்தனப் போக்கின் காரணமாக தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டன. இதில் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 152 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், காலியாக உள்ள இந்த 152 இடங்களையும் அகில இந்தியத் தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 29.05.2026 அன்று உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தி.மு.க. அரசின் சார்பில் திறமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு இந்த இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீதிமன்றத்தில் உரிய சட்டப்பூர்வ வாதங்கள் முறையாக எடுத்து வைக்கப்படவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இடங்களைச் சரண்டர் செய்கிறோம்’ என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதே இந்தத் பின்னடைவுக்குக் காரணம் என்று உதயநிதி தனது கடிதத்தில் குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு, பின்னர் திமுக அரசால் சட்டப் போராட்டங்கள் மூலம் நிலைநாட்டப்பட்ட அரசு மருத்துவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு, தற்போது தவெக அரசின் அலட்சியத்தால் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இதயநோய், புற்றுநோய், நரம்பியல் போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, 152 இடங்களும் அகில இந்தியத் தொகுப்பிற்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உதயநிதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
