தாய்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள டான் யாய் டாங் (Don Yai Thong) தொல்பொருள் தளத்தில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நுண்கலைத் துறை தெரிவித்துள்ளது. பெட்சபுரி மாகாணத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மனித எலும்புக்கூடுகளுடன் இந்த மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட மோதிரங்களில் ஒன்றில், பழங்கால இந்திய எழுத்து முறையான ‘பிராமி’ வரிவடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய வானியலில் மிகவும் மங்களகரமான ராசிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘புஷ்யா’ (Pushya) என்பதைக் குறிக்கும் வகையில், அந்த எழுத்துக்கள் “புசாரகிதாசா” (pusarakhitasa) என்று வாசிக்கப்படுவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். மற்றொன்று எவ்வித வேலைப்பாடுகளும் இல்லாத சாதாரண தங்க மோதிரமாகும். பண்டைய இந்திய வர்ணாசிரம முறையின்படி, இந்த மோதிரங்களுக்குச் சொந்தக்காரர் ‘வைசிய’ சமூகத்தைச் சேர்ந்த வணிகராக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தலைநகர் பேங்காக்கிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டான் யாய் டாங் தளம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்பகுதி மக்கள் நெல் வயலில் பழங்கால வெண்கல முரசுகளைக் கண்டெடுத்ததைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது. இத்தளம் தாய்லாந்தின் இரும்புக்காலம் என்று அழைக்கப்படும் சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில், எட்டு மனித எலும்புக்கூடுகள், வெண்கல மற்றும் தங்க நகைகள், மட்பாண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், செல்வந்தர்கள் அல்லது சமூகத்தின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சடங்கு ரீதியான அடக்கம் செய்யப்பட்ட இடமாக இது இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இந்த அகழ்வாராய்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் நுண்கலைத் துறை தெரிவித்துள்ளது.
