அதிமுக எம்.எல்.ஏக்கள்  மூவர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்ட நிலையில், இது குறித்து திமுகவும், காங்கிரசும் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிமுவில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்,  தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர், இன்று தலைமைச் செயலகம் சென்று சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்படியே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறைக்கு சென்று அவர் முன்னிலையில் தங்களை தவெகவிலும் இணைத்துக் கொண்டனர்.

இதனைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிவில், மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

107 எம்.எல்.ஏக்களுடன் விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே. மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள்.

அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது.

தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று. அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர்.

உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு.

இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.

மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version