இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனுமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டு இந்த முக்கிய முடிவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
வீடியோவில் ரஹானே, “ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கமும், முடிவும் உண்டு என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். பேட்டிங்கில் சரியான டைமிங் முக்கியம் என நம்புபவன் நான். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என உணர்கிறேன்” என்று தெரிவித்தார். தனது டெஸ்ட் கேப் எண் 278-ஐ நினைவுகூர்ந்த அவர், “இத்தனை ஆண்டுகளாக எனக்கு அளித்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
‘அஜிங்க்யா’ என்ற பெயருக்கு ‘வெல்ல முடியாதவன்’ என்று பொருள் என்றாலும், கிரிக்கெட் தனக்கு தோல்விகளின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்ததாக அவர் உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். “நாம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்திக்கிறோம். ஆனால் ரசிகர்களின் இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை” என்ற அவரது வார்த்தைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளன.
ரஹானே 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு சேவை செய்துள்ளார். மூன்று வடிவங்களிலும் இதுவரை 8,414 ரன்களை 35.95 சராசரியில் குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 51 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் 5,077 ரன்களை எடுத்த அவர், 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டிகளில் 4 வெற்றிகளும் 2 டிராவும் கிடைத்தன. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் 90 ஆட்டங்களில் 2,962 ரன்களும், டி20 சர்வதேசத்தில் 20 போட்டிகளில் 375 ரன்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 முறை கேப்டனாக செயல்பட்டு மூன்றிலும் வெற்றி பெற்றார். டி20-யில் 2 போட்டிகளில் தலைமை தாங்கினார்.ஐபிஎல் தொடரில் 2008 முதல் 212 போட்டிகளில் விளையாடிய ரஹானே 5,367 ரன்கள் குவித்துள்ளார்.
2 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் இதில் அடங்கும். அவரது நிலையான பேட்டிங் மற்றும் தலைமைத்துவம் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளன.ரஹானேவின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது பங்களிப்பு எப்போதும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும்.
