ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டா உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி எபோலா பாதிப்பால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புதிய வகை எபோலா தொற்றால் பாதிக்கப்படும் 100 நபர்களில், சராசரியாக 30 பேர் மரணமடையும் அபாயம் இருப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் பதற்றம் நிலவினாலும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் எபோலா பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு, தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ‘தேசிய வைரலாஜி நிறுவனம்’ (NIV) எபோலா கண்டறிதலுக்கான முதன்மை ஒருங்கிணைப்பு ஆய்வகமாக மாற்றப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்க முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சிறப்புத் தனிமைப்படுத்தல் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் இந்தியாவில் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதே சமயம், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளையும், உண்மைக்குப்புறம்பான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
