தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்பான ஒரு ஆடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அந்த ஆடியோவில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது தொகுதிக்குள் வந்து அதிகாரிகளை சந்திப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “என் தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரர்களை கால் வைக்க விட மாட்டேன். மீறி வந்தால் தூக்கி வைத்து கொன்று புதைத்துவிடுவேன்” என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் தவெக ஒன்றிய செயலாளர் ராஜகுருவுடன் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து திமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டியவர்கள் ரவுடி பாணியில் மிரட்டல் விடுவது ஜனநாயகத்துக்கு அவமானம். சட்டத்தை கையில் எடுக்கும் இத்தகைய போக்கு மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” என அக்கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், மிரட்டலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த ஆடியோ அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது எனவும், எதிர்முனையில் பேசிய ராஜகுரு அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர் மாவட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழல் குறித்து முழுமையான விளக்கம் இன்னும் அமைச்சர் தரப்பிலிருந்து வரவில்லை. இந்த சம்பவத்துடன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத் தொடர்பான பழைய வீடியோ, அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு, அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தவெக அரசுக்கு சவாலாக மாறியுள்ளன.
எச்சரிக்கைகள் இருந்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சர்ச்சைகளில் சிக்குவது அரசின் இமேஜை பாதிக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக ஒழுக்கம் குறித்து புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் தீவிரமாக உள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கை பாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
