அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் இசக்கி சுப்பையா. இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன்காரணமாக அம்பாசமுத்திரம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில், முன்பு போட்டியிட்ட இசக்கி சுப்பையாவையே மீண்டும் வேட்பாளராகக் களமிறக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
