திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் கடல் மற்றும் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத் தொழிலாளர்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்துக்கு பிறகு தொழிற்சாலை மூடப்பட்டு அமோனியா வாயு அகற்றும் பணி சுமார் 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அதிகாரப்பூர்வமாக இன்று ‘சீல்’ வைக்கப்பட்டது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வருவாய்துறை அதிகாரிகள் துண்டித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version