அண்ணாமலை தொடங்கி உள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநில மாநாட்டில் போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தும் விதமாக 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று (ஜூலை 12) மிகப்பிரமாண்டமாக அண்ணாமலை தொடங்கி உள்ள ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாடு நடைபெற்றது. “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக அண்ணாமலையுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிறேவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்:
- போதைக்கு எதிரான இந்த இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் “White Band மாதமாக” கடைப்பிடிக்கப்படும்.
- தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், சென்னையில் நடத்தப்பட்ட கள ஆய்வில் இன்னும் பல டாஸ்மாக் கடைகள் தடையின்றி இயங்குவது தெரியவந்துள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்தி, விதிமீறிச் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
- 2025ம் ஆண்டு அரசாணையின்படி கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களின் செயல்பாட்டு நிலை மற்றும் அதன் தாக்கத்தை அரசு இணையதளத்தில் பதிவேற்றிப் பகிரங்கப்படுத்த வேண்டும். இக்குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்களில் அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் காலை நேரத்திலேயே மதுபானம் அருந்துவதைத் தடுத்து, பணியிட ஒழுக்கத்தைப் பேண வேண்டும். கள்ளச்சந்தை மது விற்பனையை முற்றிலும் தடுப்பதோடு, கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருள்கள் இல்லாத நிலையைத் தமிழகத்தில் உருவாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரசு அனுமதி பெற்ற நட்சத்திர விடுதிகள் மற்றும் FL2 மதுக்கடைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட உரிம வரம்புகளை மீறிச் சாதாரண சாராயக் கடைகளைப் போலச் செயல்படும் நடைமுறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் சமூக நலனையும் கருத்தில் கொண்டு, மாவட்டந்தோறும் தீவிர போதைப்பொருள் தடுப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகத்தைத் தேசிய முன்னோடி மாநிலமாக மாற்ற அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
