எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போராட்டம் என்ற பெயரில் திமுகவினர் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கும் சட்டம் – ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் விளைவித்து வருவதாக தேசிய பாஜக மகளிரணித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ள அவர், “உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் இந்தச் செயல்கள் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானவை.
சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு மதிப்பளிக்காமல், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னெடுப்பது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திமுக மகளிரணியை விமர்சித்துள்ள அவர், “பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி, பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தார்மீக உரிமையையே இழந்துவிட்டது” என்றும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
