முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் 20 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன். மனுவில், “எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும் கட்சியினர் மீது பொதுமக்களிடையே உள்ள அதிருப்தியை விமர்சித்துப் பேசினேன். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

இன்று இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதி, “அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண குடிமகன் அல்ல. அவர் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்எல்ஏ. முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மனு தள்ளுபடி ஆன சில நிமிடங்களுக்குள் பரபரப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். தனது சொந்த வாகனத்தில் காவல் நிலையத்திற்கு வர அனுமதிக்குமாறு அவர் கோரியபோது, போலீசார் அதை மறுத்துவிட்டு அவரை போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். திருச்செந்தூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அவர், முன்பு அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். இந்த வழக்கு அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் சில இதை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது ஆத்தூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version