நீட் (NEET) தேர்வு மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான முறையை கொண்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வீ த லீடர்ச் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பல ஆண்டுகளாக நான் தனிப்பட்ட முறையில் நீட் தேர்வை ஆதரித்து வந்தேன். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்கியதோடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வாய்ப்பை நீட் வழங்கியது என்று நம்பினேன்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீட் இளநிலை (UG) தேர்வின் வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்களுக்கு இது மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டிய அமைப்பே தோல்வியடைந்த நிலையில், அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுவே மாணவர்கள் தெருக்களில் இறங்கி தங்களது வேதனையை வெளிப்படுத்த காரணமாக அமைந்தது என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? போராட்டம் தீவிரமடைந்த பிறகே ஏன் உரையாடல் தொடங்கப்பட்டது? இத்தனை நாள் எதற்காக காத்திருந்தீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்துபவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கும்போது, சுயநல நோக்கமுடைய சிலர் அதில் நுழைந்து தங்களது அரசியல் அல்லது பிற நோக்கங்களை முன்னிறுத்த முயற்சிப்பது இயல்பு. அவர்கள் போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகாமல் மாணவர்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இறுதியாக, “பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவர்களுடன் வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். எந்த நாட்டின் வலிமையும் அதன் இளைஞர்கள் அந்த நாட்டின் நிறுவனங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. கல்வி அமைப்பின் நியாயத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மாணவர்கள் நம்பிக்கையை இழந்தால், அது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்தும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version