தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் எதிர்க்கட்சியான அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசும் முயற்சிகளும் புகாராக எழுந்துள்ளன. இந்த சூழலில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று அமெரிக்கா புறப்படுகிறார்.
கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலகினார். தற்போது ‘We The Leaders’ அமைப்பின் மூலம் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் அவர், இந்த அமைப்பை விரைவில் முழு அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளார். மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாஜகவிலிருந்து விலகிய பிறகு அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் மட்டுமே அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வரும் அவரது அணுகுமுறை கவனத்தை ஈர்க்கிறது. இந்நிலையில், தமிழக அரசியல் முழுவதும் பஞ்சாயத்து சூடுபிடித்துள்ளது. அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய ராஜினாமா செய்து வருகின்றனர். இன்றும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட பலர் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், தவெக எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசோக்குமார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், செந்தில் பாலாஜியுடன் கடும் அரசியல் மோதல் கொண்டிருந்த அண்ணாமலை இந்த விவகாரங்கள் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று காலை 8 மணி வரை அவர் மவுனம் காத்ததால், அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தகைய முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெறும் வேளையில் அண்ணாமலை இன்று மதியம் அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசியல் சமன்பாடுகள் மாறும் கட்டத்தில் அண்ணாமலையின் அடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
