வேலூர் விமான நிலையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மத்திய அரசின் ‘உடான்’ (RCS-UDAN-II) திட்டத்தின் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்து, இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்தின் (DGCA) கள ஆய்வுகளும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மையத்திடமிருந்து (BCAS) பெறப்பட வேண்டிய இறுதிப் பாதுகாப்பு அனுமதி மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் உடனடியாக உரிமம் வழங்கி, விமான நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பி எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள தகவலில், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானச் சேவைக்காகக் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். வேலூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இப்பகுதியில் மருத்துவச் சுற்றுலா, சிறு மற்றும் குறு (MSME) தொழில்கள் வளர்ச்சி அடைவதோடு, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பயனளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி, இறுதிப் பாதுகாப்பு அனுமதியையும் விமான நிலைய உரிமத்தையும் விரைந்து வழங்க வேண்டும் என்றும், வேலூரில் ‘உடான்’ விமான சேவைகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் அவர் நேரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
