சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது IZ-1420 ரக ஹெலிகாப்டர். பறந்து கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உணர்ந்தனர். உடனடியாக விவேகத்துடன் செயல்பட்ட அவர்கள், விபத்தைத் தவிர்க்கும் நோக்கில் கீரப்பாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளியைத் தேர்வு செய்து, ஹெலிகாப்டரைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை ஆய்வு செய்யவும், பழுதுபார்க்கவும் உடனடியாகத் தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கூடுதல் தொழில்நுட்பக் குழுவினரையும், பழுதுபார்ப்புக்குத் தேவையான உபகரணங்களையும் ஏந்தி மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டுச் சூழலை ஆய்வு செய்த பிறகே, அந்த மூன்று ஹெலிகாப்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. தற்போது, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹெலிகாப்டரின் இயந்திரக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version