சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இவைகளில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து இன்று காலை 224 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுமார் 500 அடி உயரத்தில் பறவை ஒன்று விமானத்தின் மீது மோதி என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலைமையை சாதுர்யமாக கையாண்ட விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கி சுமார் 236 பேரின் உயிரை காப்பாற்றினார்.
பறவை மோதிய பகுதியை ஆய்வு செய்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர ஆய்வுக்குப் பிறகு விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையிலிருந்து லண்டன் செல்ல தயாராக இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முழு ஆய்வுக்கு பின்னரே விமானம் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
