தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்தளப் பதிவில்,
எம்பெருமான் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியுள்ளது, அளவில்லா மகிழ்ச்சியையும் பூரண மனநிறைவையும் தருவதாகக் கூறியுள்ளார்.
முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதற்காக, யார் எத்தனை வழக்குகளை தொடுத்தாலும், எத்தனை பராக்கிரமசாலிகளை வாதிட அழைத்து வந்தாலும் இறுதியில் இறை நம்பிக்கையும், இயற்கையின் நியதியுமே வெல்லும் என்பதற்கான உதாரணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் வாக்கு வங்கிக்காக, “மதச்சார்பின்மை” என்ற பெயரில், இந்துக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடியவர்களின் மூளை குழம்பிப் போகுமளவுக்கு குட்டு வைத்து அனுப்பியுள்ள, உச்சநீதிமன்றத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன்,
“ஒடியா விழவின் நெடியோன் குன்றம்” என நமது சங்ககாலப் பாடலான அகநானூறு பெருமையுடன் பாடும், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தீபத்தூண், கார்த்திகை தீபத்தால் ஒளிரும் அந்த கண்கொள்ளா காட்சியை தரிசிக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா என முழக்கத்தை பதிவிட்டுள்ளார்.
