துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இந்த  சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என கூறமுடியாது; பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்; பல்கலைக்கழங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன்  அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பிலும், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பிலும் பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version