காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்க பெங்களூர் செல்லும் முன்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்தின் நிலைப்பாடு மற்றும் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன் மாநிலத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. மாநிலத்தின் ஒருமித்தக் குரலாகவும் வலிமையான கோரிக்கையாகவும் பேச்சுவார்த்தை அமைய அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் முதலமைச்சர் கேட்டறிய வேண்டும் என்று அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
முந்தைய காலங்களில் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் அவசரப்படாமல் அனைத்துக் தரப்புடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
