திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மிக முக்கியமான ஒரு தர்ம சாசன நிலம் பெரும் மோசடியில் சிக்கியுள்ளது. சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெறும் ₹2 கோடிக்கு சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1888-ம் ஆண்டு பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவர், தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டுவதற்கும் இந்து மதக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் என தர்ம சாசனமாக இந்த நிலத்தை வழங்கினார். இந்த தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ அல்லது வேறு எந்த வகையிலும் பயன்படுத்தவோ உரிமை இல்லை. இது முழுமையான பொது அறக்கட்டளை சொத்தாகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு முயற்சிகளும், நீதிமன்ற வழக்குகளும் தொடர்ந்து வந்தன.
இந்நிலையில், 2025 செப்டம்பர் மாதம் பழனி கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தி, பக்தர்களின் வசதிக்காகக் ‘கட்டணமில்லா இலவச வாகன நிறுத்துமிடமாக’ மாற்றி பராமரித்து வருகிறது. பழனி முதன்மைச் சார்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இந்த நிலம் தேவஸ்தானத்திற்கே உரியது என்றும், இணை ஆணையரே நிர்வாகி என்றும் தீர்ப்பளித்துள்ளன.
ஆனால் இந்த உத்தரவுகளை மீறி, ஜூலை 6 அன்று இரண்டு தனிநபர்களின் பெயரில் இந்த நிலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டது. பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலில் இருந்த நிலையில், கூடுதல் பொறுப்பில் இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோர், ஆவணங்களைச் சரியாகச் சரிபார்க்காமல் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக இந்தப் பதிவை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் முதலில் நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கின் பின்னணியில் உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற உத்தரவிட்டது. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் இந்த உத்தரவை நேற்று மாலை பிறப்பித்தார்.இதனைத் தொடர்ந்து, பழனி போலீசார் முதல் தகவல் அறிக்கை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட அசல் ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி சம்பவம் பழனி கோயில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளதால், முழுமையான விசாரணை மூலம் உண்மை வெளியாகும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
