தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஜூலை 16) மற்றும் நாளை (ஜூலை 17) வெப்ப அலை நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி சமவெளிப் பகுதிகள், திருநெல்வேலி சமவெளிப் பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூலை 17) கரூர், ஈரோடு, தூத்துக்குடி சமவெளிப் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலை நிலை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களிலும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதமும் நிலவக்கூடும். இதனால் பொதுமக்களுக்கு வெப்பம் மற்றும் புழுக்கம் (Hot & Humid) காரணமாக உடல் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
