தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை திரும்பப் பெற அனுமதித்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2025 அக்டோபரில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 42 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையின் “வீ த லீடர்ஸ்” இயக்கத்தைச் சேர்ந்த கரு நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சுயாதீன கல்வி நிபுணர்கள் குழுவை அமைத்து விடைத்தாள் மதிப்பீட்டு முறையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை உதவி பேராசிரியர் நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு நேரடி பாதிப்பு என்ன என்பதையும், பணிநியமன விவகாரத்தில் பொதுநல வழக்கு எந்த அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடைமுறையை உரிய காலத்தில் சவால் செய்யாததால் தற்போது இடைக்கால உத்தரவு வழங்க இயலாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்று தேவையெனில் புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
