திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு  முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த ஜனநாயகன் படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.

படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை  எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மனுதாரரரை கைதுசெய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,  ஆரம்பத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்படவில்லை, சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை மனுதாரர் பார்த்தார் என்பதைத் தவிர, வேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை; இவற்றின் அடிப்படையில் மனுதாரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version