மக்கள் சந்திப்பு, காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் இன்று கரூர் செல்கிறார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு முதல்முறையாக விஜய் செல்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் 32 வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தனியார் காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கரூர்- சேலம் புறவழிச்சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். 5 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்கள் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுக்கூட்ட மைதானத்தில் க்யூஆர் கோடு அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் (ADGP) டி.எஸ்.அன்பு தலைமையில், மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் மற்றும் கரூர் எஸ்பி ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version