பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டதாக முதல்வர் விஜய் மகிழ்ச்சியாக தெரிவித்ததாக அரசு பேருந்து கண்டக்டர் தெரிவித்துள்ளார்.
127.21 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை உள்ளிட்ட ஆறு போக்குவரத்து கோட்டங்களில் இந்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 164 டீசல் பேருந்துகளும், 134 சி.என்.ஜி. பேருந்துகளும் அடங்கும். இந்த நவீன பேருந்துகள் மூலம் பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29ஏ எண் பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு நல்வாழ்த்து தெரிவித்த அவர், சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பினார். பயணம் முழுவதும் சாலையோரம் கூடிய பொதுமக்களுக்கு அவர் கை அசைத்தபடியே சென்றார். பேருந்து ஊழியர்களுடன் நட்பார்ந்த முறையில் உரையாடினார்.
இதுகுறித்து நடத்துநர் சாமுவேல் கூறுகையில், “12 ஆண்டுகளாக போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வருகிறேன். முதல்வர் நேரில் பேருந்தில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. 300 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வாகனங்களில் பல நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. நன்றாகப் பணியாற்றுமாறு அவர் அறிவுறுத்தினார். முதல்வர் உள்ளிட்ட அனைவரும் டிக்கெட் எடுத்துப் பயணித்தனர். 15 பேர் டிக்கெட் வாங்கினர். பேருந்தில் பயணம் செய்வது தனது நீண்ட நாள் கனவு என்று விஜய் தெரிவித்தார்” என்றார்.
மேலும் ஓட்டுநர் டில்லி பாபு கூறியதாவது, “என் பெயர் என்ன என்று முதல்வர் விசாரித்தார். அவர் ஏறியபோது சற்று பதற்றமாக இருந்தது. பின்னர் அமர்ந்ததும் மகிழ்ச்சி பொங்கியது. இதுவரை தொலைவிலிருந்து பார்த்திருந்த எனக்கு இன்று முதல் முறையாக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பயணிகளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அழைக்கும் புதிய அமைப்பு உள்ளது. வாகனம் வசதியாக உள்ளதா என்று விசாரித்தார். ‘சூப்பராக இருக்கிறது’ என்று பதிலளித்தேன்” என்றார். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய பேருந்துகள் மூலம் நகரப் போக்குவரத்து மேலும் திறம்படச் செயல்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
