மிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்கள், வரும் மே 23 அன்று டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் 33 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்றுதான் முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த முதல் டெல்லிப் பயணம் தேசிய அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் தங்குவதற்கான அதிநவீன ‘சூட் ரூம்’ மற்றும் அவசர ஆலோசனைக் கூட்ட அரங்கு உள்ளிட்டவை மிகத் தீவிரமாக, போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுத் தயாராகி வருகின்றன.

முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லிப் பயணத்தின் முதன்மை நோக்கம், தமிழ்நாடு எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியைச் சீர்செய்வதே ஆகும். குறிப்பாக, ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதிப் பகிர்வு மற்றும் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களில் தமிழகத்திற்குத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் பாரபட்சம் குறித்து அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.

மத்திய பாஜக அரசு கொடுக்கும் அழுத்தங்களுக்குப் பணியாமல், மாநில சுயாட்சியை விட்டுக் கொடுக்காமல் தமிழகத்திற்கான நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதலமைச்சர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து விரிவான கோரிக்கை மனுக்களை அளிப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

மறுபுறம், இந்த அரசுமுறைப் பயணத்திற்குப் பின்னால் மிக முக்கிய அரசியல் நகர்வுகளும் அடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸை அமைச்சரவையில் பங்குதாரராகச் சேர்த்து, கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்துள்ளார். எனவே, தேசிய அளவில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். மாநில உரிமைகளை மீட்பதற்கான நிதிப் போராட்டக் கோரிக்கைகள் ஒருபுறம், தேசிய அளவிலான காங்கிரஸ் கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்கள் மறுபுறம் என, முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லிப் பயணம் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version