தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர், கரூர் மக்களின் அன்பை என்றும் மறக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.

“என் மனதை விட்டு கரூர் எப்போதும் நீங்காது” எனக் கூறிய விஜய், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தை நினைவுகூர்ந்து, அங்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கூட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிராகக் கடுமையாகத் தாக்குதல் நடத்திய முதலமைச்சர், “ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரத்தை ஒழித்த நாங்கள், குதிரை, கழுதை, ஒட்டகம் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை” என்றார். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வெவ்வேறு ஆட்கள் அல்ல, இருவரும் ஒரே கூட்டுக் களவாணிகள் என்று விமர்சித்தார்.

கரூர் கம்பெனி உரிமையாளர் எங்கே மறைந்திருக்கிறார் என்று தெரியவில்லை என சினிமா பாடலை மேற்கோள் காட்டி கிண்டல் செய்த விஜய், மற்றொரு முக்கிய தலைவர் (எ.வ.வேலு) சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். திமுக அரசியல் செய்யும் விதத்தை விமர்சித்த அவர், “தாங்கள் ஆட்சியில் இருப்பதாக நினைத்து முதல்வர் கரூருக்கு வரக்கூடாது எனச் சொல்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் சம்மட்டியால் அடித்தும் அவர்கள் விழித்துக் கொள்ளவில்லை” என்றார். நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.

மேகதாது அணை வழக்கில் தமிழ்நாட்டின் மனு எப்போது ரத்து செய்யப்பட்டது, அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள், ஏன் சரியாக வாதாடவில்லை என்ற கேள்விகளை எழுப்பினார். தீய சக்தியைத் திருத்த முடியாது எனக் கூறிய அவர், இடைத்தேர்தலில் மக்கள் அவர்களை வெளுத்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லை என வலியுறுத்திய முதலமைச்சர், “அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமோ, ஊழலோ இல்லை. வேலைகள் விரைவாக நடைபெறுவதாக மக்கள் பெருமையுடன் பேசுகின்றனர்” என்றார். எல் அண்ட் டி நிறுவனத்துடன் ரூ.18,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

முந்தைய நிர்வாகத்தின் நிதி மோசடிகளை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கையைப் பற்றி பேசிய விஜய், “ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியுள்ளனர். தண்ணீர் எங்கே போனது எனத் தெரியவில்லை” என்ற உவமையுடன் விளக்கினார். சென்னை பாலம் உள்ளிட்ட திட்டங்களில் இருமடங்கு அதிக செலவில் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதைத் தோண்டி எடுத்து ரத்து செய்ததாகவும் தெரிவித்தார்.

“பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும். Talk less, Work more என்பதே எங்கள் அரசியல்” என்று முடித்த விஜய், தனது அரசு மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதி அளித்தார். இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version