இளைஞர்களால் இயக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் நையாண்டி இயக்கமாக உருவெடுத்துள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.
இந்திய அரசியல் மற்றும் சமூக ஊடக உலகை புயலென சுழற்றிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) இயக்கத்தின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு இன்று இந்தியாவில் முடக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நையாண்டி இயக்கம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் “கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்” என்ற கருத்துக்கு எதிர்ப்பாக உருவானது. இந்தக் கருத்து இளைஞர்களை இலக்கு வைத்ததாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பாஸ்டன் யுனிவர்சிட்டி மாணவர் அபிஜித் தீப்கே தலைமையில் மே 16 அன்று இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
இயக்கத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அபிஜித் தீப்கே புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். “கரப்பான் பூச்சி திரும்பிவிட்டது” (Cockroach is Back) என்ற பெயரில் உருவான இந்தப் புதிய கணக்கு, “கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் சாவதில்லை” என்ற வாசகத்துடன் தீவிரமாக செயல்படத் தொடங்கியது. திரும்பி வந்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முக்கியப் பதிவுகளை வெளியிட்டது. ஒன்று, “எங்களை ஒழித்துவிடலாம் என்று நினைத்தீர்களா? ஹாஹா” என்ற நையாண்டி. மற்றொன்று, பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் தங்கள் கணக்கின் பின்தொடர்பவர்களை ஒப்பிடும் ஸ்கிரீன்ஷாட். இதன் மூலம், தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த இயக்கம் தொடங்கிய நான்கே நாட்களில் இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டியது. ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வப் பக்கத்தை விட அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றிருந்த நிலையில் இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்ற இயக்கம், வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள், அரசியல் அமைப்பு மீதான விரக்தி போன்ற பிரச்னைகளை நையாண்டியுடன் எழுப்பி வருகிறது. “மதச்சார்பற்ற – சோசலிச – ஜனநாயக – சோம்பேறி” என்பதை கொள்கையாகக் கொண்ட இது, உண்மையான அரசியல் கட்சியல்ல என்றாலும், 40,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஈர்த்துள்ளது. மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட சில தலைவர்கள் ஆர்வம் காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
அபிஜித் தீப்கே, இயக்கத்தின் மீது ஹேக்கிங் முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதன் பின்னர் முடக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களின் குரலை அடக்க முயற்சிப்பதாக அவர் விமர்சித்தார். “கரப்பான்கள் பெருகும்” என்ற மனநிலையுடன் புதிய கணக்கு செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நையாண்டி இயக்கம் இந்திய சமூக ஊடக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இளைஞர்களின் ஏமாற்றம் மற்றும் எதிர்ப்பை இந்த இயக்கம் பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. முடக்க நடவடிக்கைக்கு எதிராகவும், இளைஞர்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இயக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் இளைஞர்களின் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள இந்தச் சம்பவம், அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது
