மயிலாடுதுறை அருகே வரகடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 12 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
இதனை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேலதாள வாக்கியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் தாழஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
