மேட்டுப்பாளையம் அருகே ஆக்ரோஷமாக மாறிய பாகுபலி யானை குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து வேரோடு மரத்தைத் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை வனப்பகுதியில் அடிக்கடி தென்படும் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் பிரபல காட்டு யானை, நேற்று இரவு திடீரென ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நன்கு அறிமுகமான இந்த ஆண் காட்டு யானை, வழக்கமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை காட்டுப்பகுதிக்குச் சென்று மீண்டும் திரும்புவது வழக்கமாகும். இந்தப் பயணத்தின் போது மேட்டுப்பாளையம்–உதகை சாலையை அமைதியாகக் கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதனை எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஓடந்துறை அருகே உதகை சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடை பகுதியை வந்தடைந்த யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த ஒரு பெரிய மரத்தை தள்ளியதுடன், அங்கும் இங்கும் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் சில நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கண்காணித்தனர். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு யானை சாலையை கடந்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது.
பொதுவாக அமைதியான குணத்துடன் காணப்படும் ‘பாகுபலி’ யானை இவ்வாறு ஆக்ரோஷமாக நடந்துகொண்டது ஏன் என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வனவிலங்குகளின் இயல்பான நடத்தை மாற்றம், உணவு தேடல், அல்லது பிற சுற்றுச்சூழல் காரணங்கள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
