கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு வழக்கை வாபஸ் பெறக்கோரி, கல்லூரி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்களையே போலீசார் மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், மாடுகளை மேய்த்து சேதப்படுத்தியது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை நடத்துவதற்கு மாணவியின் தாத்தா உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை சுமார் 7 மணியளவில், விவசாய நிலத்தில் இருந்த தாத்தாவை பார்ப்பதற்காக கல்லூரி மாணவியும் அவரது தாயாரும் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த எதிர் தரப்பைச் சேர்ந்த பேர் கொண்ட கும்பல், வழக்கு விஷயமாக தாத்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைக் கண்ட கல்லூரி மாணவி, “தாத்தாவிடம் ஏன் சண்டை போடுகிறீர்கள்?” எனக் கேட்டு, தனது செல்போனில் அந்தச் சம்பவத்தைப் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், கல்லூரி மாணவியின் செல்போனைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

வருண்குமார், தேவகுமார் ஆகியோர் என் கால்களை பிடித்துக் கொள்ள மஞ்சுநாதன் என்பவர் மேலாடையைக் கிழித்து மானபங்கம் செய்ததாக, இளம்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அக்கும்பலிடமிருந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு தப்பித்த தாயும் மகளும், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பின்னர், படுகாயமடைந்த கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போச்சம்பள்ளி காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாரிடம் கேட்டபோது, கல்லூரி மாணவி கூறுவது பொய். நிலம் சம்மந்தமாக இருவருக்கும் உள்ள பிரச்சனையில் அடிதடி மட்டுமே ஏற்பட்டுள்ளது. தற்போது இரு தரப்பிலும் சிஎஸ்ஆர் பதியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
