டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில், காவல் நிலையத்தில் ஏற்படும் எந்த மரணத்திற்கும், அது தற்கொலையாக இருந்தாலும் மாநில அரசு முழு பொறுப்பை ஏற்று, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, காவல்துறையின் பொறுப்புணர்வு மற்றும் தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2018-ம் ஆண்டு டெல்லியின் கராவல் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் இதற்கு காரணம். 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார். மறுநாள் காலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், இளைஞரின் தந்தை இந்த மரணத்தில் சந்தேகம் எழுப்பினார். தனது மகனை உதவி ஆய்வாளர் உடல் ரீதியாகத் தாக்கி துன்புறுத்தியதாகவும், அவரை விடுதலை செய்ய ரூ.30,000 லஞ்சம் கோரியதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் மகன் உயிரிழந்ததற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி சச்சின் தத்தா தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பளித்த நீதிபதி, “காவலில் உள்ள ஒருவர் தனது அடிப்படை உரிமைகளை இழப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு அவருக்கு உத்தரவாதம் அளிக்கிறது” என்று வலியுறுத்தினார். வன்முறை, அலட்சியம் அல்லது தற்கொலை என எந்த வகையான மரணமாக இருந்தாலும், அது நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், இது தனிமனித கண்ணியத்தையும் குற்றவியல் நீதி அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும், “இயற்கைக்கு மாறான காவல் மரணங்களுக்கு சட்டப்பூர்வமான காரணங்களைச் சொல்லியோ அல்லது குற்றமின்மையை வாதிட்டோ அரசு தப்பிக்க முடியாது” என்று தெளிவுபடுத்திய நீதிபதி, உயிரிழந்த இளைஞரின் தந்தைக்கு ரூ.18,44,000 இழப்பீடு தொகையை எட்டு வாரங்களுக்குள் வழங்குமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு, நாடு முழுவதும் அடிக்கடி எழும் காவல் மரணங்கள் தொடர்பான விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இது அமையும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version