மிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு சுமார் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த முறையீட்டை பரிசீலித்த ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது.

கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில், காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாகவும், தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பிலிகுண்டுலுவில் 30,748 கனஅடி நீர் வந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 178 கனஅடி மட்டுமே வந்துள்ளதாகவும், காவிரிப் படுகை அணைகளில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 99 டிஎம்சி நீர் இருந்ததாகவும் அது சுட்டிக்காட்டியது.

இரு மாநிலங்களின் வாதங்களையும் பரிசீலித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version