இளைஞர்களால் தொடங்கப்பட்ட ‘காக்ரோச் ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP)’-யின் எக்ஸ் (X) சமூக வலைதளக் கணக்கை மீண்டும் செயல்படுத்துமாறு டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கணக்கு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 2 லட்சம் பின்தொடர்பவர்களை பெற்றிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் முடக்கப்பட்டிருந்தது.
தேசிய அளவிலான மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வின் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மறுதேர்வு நடத்தப்பட்ட சூழலில், அந்த எக்ஸ் கணக்கில் வெளியான பதிவுகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் தொடர் அமர்வு போராட்டங்களை நடத்தி வருகிறது.
முதன்மை எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதால், மாற்று எக்ஸ் கணக்கின் மூலம் அந்த அமைப்பு தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, கணக்கை மீண்டும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றம் கணக்கை மீண்டும் திறக்க உத்தரவிட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை வரவேற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, “இது எங்கள் இயக்கத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும், டிஜிட்டல் உரிமைகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், செவ்வாய்க்கிழமை மாலை வரை அந்த எக்ஸ் கணக்கு “சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்க இந்தியாவில் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்புடன் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.
“சோம்பேறிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் எப்போதும் சரியான கருத்தையே கூறுபவர்கள்” என்பவர்களின் பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு, இன்ஸ்டாகிராமில் சுமார் 2.2 கோடி (22 மில்லியன்) பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
அதேநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக), இந்த அமைப்பை “இந்தியாவுக்கு எதிரான குழுவின் ஒரு பகுதி” என்று விமர்சித்துள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 90 லட்சத்திற்கும் அதிகமான (9 மில்லியன்) பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
