டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய நாடாளுமன்றப் பேரணியின் போது, மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூரமான தடியடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்த போதிலும், டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு காவல்துறைக்குக் கடுமையான கண்டிப்பைக் காட்டியுள்ளது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதல் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்யக் கோரியும், காவல்துறை அத்துமீறல் குறித்து விசாரிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், “நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்களது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” எனக் கூறி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இதில் தலையிடத் திட்டவட்டமாக மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் அதிகப்படியான பலம் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட இரண்டு பொதுநல மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், சில போலீசார் சீருடை அணியாமல் கம்புகளுடன் போராட்டக்காரர்களை தாக்கியதாகவும், பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது அளவுக்கு மீறிய வன்முறை நடத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மீறி கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், கூட்டத்தைக் கலைப்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
டெல்லி காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்கள் தனித்தனியாகக் காவல் நிலையத்தையோ அல்லது மாஜிஸ்திரேட்டையோ அணுகிப் புகார் அளிக்கலாம்” என வாதாடினார். ஆனால், இந்த வாதத்தை அடியோடு நிராகரித்த உயர் நீதிமன்றம், “இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; கூட்டத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டவிதிகளைப் பின்பற்றினீர்களா? சீருடை அணியாத நபர்கள் லத்திகளுடன் தாக்குதல் நடத்தியது ஏன்? எனவே, தனித்தனியாகப் புகார் அளிக்கச் சொல்வதை ஏற்க முடியாது. காவல்துறை உடனடியாக விரிவான பதிலளிக்க வேண்டும்” என அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும், சம்பவ இடத்தின் அனைத்துச் சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளையும் அழிக்காமல் உடனடியாகப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கைவிட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தலையீடு, காவல்துறையின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மிகப்பெரிய சட்டப் போராட்ட நம்பிக்கையை அளித்துள்ளது.

