திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், இன்று மாலை அதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த இருபதாம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 10 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தன் மீது போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது என தெரிவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு  இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் நேற்று ஒத்தி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை மீண்டும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வந்தது.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கரன் நாராயணன் மற்றும் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பினரும் சுமார் அரை மணி நேரம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சுபா தேவி, திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு உத்தரவை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  இன்று மாலை நீதிமன்ற இ கோர்ட் இணைய மூலம் தீர்ப்பு உத்தரவு வெளியிடப்படும் என தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version