தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் திமுக சார்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் பரந்தாமன், அண்மையில் நடைபெற்ற சபரிவர்மன் மரணம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் கைது செய்தது. கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அவர் உடல்நலத்துடன் இருந்ததாகவும், உறவினர்களும் அவரை நலமாகவே பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்த நிலையில், குடும்பத்தினருக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், பின்னர் அவரது உடல் பிணவறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்த மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதற்கு நடுவே முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் சினிமா சூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறார். உளவுத்துறை இந்த தகவலை சொல்லியுள்ளனர். அதை திசை திருப்புவதற்காக பெரம்பூரில் சினிமா சூட்டிங் செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் பரந்தாமன் விமர்சித்தார். மேலும், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் தற்போதைய ஆட்சி நெருக்கமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்த அஜித் சம்பவத்தின்போது அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்ததை நினைவுகூர்ந்த அவர், அப்போது நடிகர் விஜய் “சாரி வேண்டாம்; நீதி வேண்டும்” என்று கூறியிருந்ததாக சுட்டிக்காட்டினார். தற்போது அதே கோரிக்கையைத்தான் பொதுமக்களும் எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 60 நாட்களில் நாகர்கோவில், திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் நான்கு காவல்துறை கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படவில்லை என்றும் பரந்தாமன் குற்றம்சாட்டினார். மேலும், ஈரோட்டில் குட்கா கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தவெக நிர்வாகி அருண்குமார் மீது காவல்துறை மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்ததாகவும், இதன் மூலம் ஆட்சியில் இரட்டை நிலைப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version