தவெக நிர்வாகிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இது தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் என திமுக ஐ.டி.விங் கடுமையாகத் தாக்கி உள்ளது.
இது தொடர்பாக திமுக ஐ.டி.விங் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;-
பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள், தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது உங்கள் கட்சியின் யோக்கியதையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கியவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது முதல், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான புகார்கள் வரை, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து நீங்கள் காட்டிவரும் அலட்சியம் உங்கள் போலித்தனத்தின் உச்சம்.
கரூரில் திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’, பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான்; இது வெறும் தொடக்கம் மட்டுமே.
சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக, உங்கள் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெண்களைச் சீண்டும்போது மவுனம் காப்பது, இந்தத் தவறுகளை நீங்களே மறைமுகமாக ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.
மிஸ்டர் விஜய், இனிமேல் இந்த அராஜகங்களை எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்! பெண்களைப் பாதுகாப்பதில் திராணியற்று, குற்றவாளிகளை அரவணைக்கும் உங்கள் இந்த ‘பாலியல் வெற்றிக் கழக’த்தின் அட்டகாசம் தொடர்ந்தால்,
இன்று கரூரில் ரமேஷுக்குக் கிடைத்த அடி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தவெக-வினருக்குத் தேடி வரும்.
மக்கள் வீதிக்கு இறங்கிப் பாடம் புகட்டத் தொடங்கிவிட்டார்கள்; உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களின் கிரிமினல் செயல்களை நிறுத்தத் திராணியில்லை என்றால், மக்களின் கோபத்திற்கு நீங்களே பலியாவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண், பணி முடிந்து தோழியுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, குளித்தலை கிழக்கு ஒன்றிய த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்குத் தர்ம அடி கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
