பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரம்பூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு முதல்வர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட 6 இடங்களில், சிசிடிவி, வை-பை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு வளாகம், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம், மற்றும் ரூ.50 லட்சத்தில் நூலகம், பயிலரங்கம் (Study Centre) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் மையம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் கிக் (Gig) பணியாளர்களுக்கான ஓய்வறை, மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு மேம்பட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதுடன், பகுதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
