ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் நவீன கால கொத்தடிமை அராஜகத்தை தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த ‘எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம், 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணியாளர்கள் அரசின் எந்த சலுகையையும் கேட்கக்கூடாது; இஎஸ்ஐ (ESI), பிஎஃப் (PF) போன்ற அடிப்படை உரிமைகளைக் கோரக்கூடாது எனப் பத்திரத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

பணி நிரந்தரம் கேட்டு எந்த சங்கமும் போராட்டம் நடத்தக்கூடாது; மீறினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியை விட்டு விலக வேண்டும் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அராஜக ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் இந்தச் செயல், தவெக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகியிருப்பதாக திமுக ஐ.டி.விங் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைப் போராட விடாமல் தடுக்கும் இந்தத் தனியார் நிறுவனத்தின் அராஜகத்தை, ‘தூய சக்தி’ என்று பேசும் தவெக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள திமுக ஐ.டி.விங்,

கேமரா முன் வேஷம் போடும் அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக நாட்டில் தொழிலாளர்களைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அடிமைப்படுத்தும் இந்த அவலத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்!

உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது இந்தத் துரோகத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் உடந்தையா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version