தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. எந்தக் கட்சிக்கும் 118 இடங்கள் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க முனைந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு உருவானது.
இதன்மூலம் 59 ஆண்டுகால திராவிட ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த மே 10-ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நடிகர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இவர்கள் கட்சித் தாவல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இருப்பினும், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலரும் தவெகவுடன் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவுக்குச் சென்றார். அதிமுகவுக்குள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றோர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் பின்னணியில், தனக்கு எதிராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி புதிய உத்தியை வகுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது அவர்கள் செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட ரகசிய ஊழல் ஆவணங்களை எடப்பாடி தன் கைவசம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆவணங்களை டெல்லி பாஜக தலைமைக்கு ரகசியமாக அனுப்பி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகம் அதிமுகவுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு தொடர்ந்து நிலைத்திருக்கும் சூழலில், எதிர்க்கட்சியான அதிமுகவின் உள்கட்சி மோதல்கள் மேலும் தீவிரமடையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
