அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இத்தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதோடு, பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
கட்சியின் இந்த எதிர்பாராத தேர்தல் தோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னை எம்ஜிஆர் மாளிகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் வாக்கு வங்கி சரிந்ததற்கான காரணங்கள் மற்றும் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான பின்னணி குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் நேரடியாகக் கேட்டறிய உள்ளார். மேலும், தோல்விக்கான உள்ளூர் காரணங்கள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகங்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்குக் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
