தமிழக போக்குவரத்து துறையின் முன்னாள் துணை ஆணையர் தரணிதரன் மற்றும் கண்டெய்னர் லாரி உரிமையாளர் முருகேசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 3-வது தெருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற துணை ஆணையர் தரணிதரனின் வீடு மற்றும் அலுவலகங்களில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் இந்தச் சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதேபோல், திருவொற்றியூர் பத்மநாப காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முருகேசனின் மகன்களான ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோருக்குச் சொந்தமான ‘வசந்தம் டிரான்ஸ்போர்ட்’ என்ற கண்டெய்னர் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த கால போக்குவரத்துத் துறை முறைகேடுகள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நபர்கள் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
