ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தாக அமைந்த நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 3வது இடத்திற்கான வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

அரைஇறுதியில் தோல்வி அடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும், பிரான்சும் மியாமியில் உள்ள மைதானத்தில் 3-வது இடத்திற்காக மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இங்கிலாந்து வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர் புகாயோ சாகா அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

2வது பாதியில் விழித்துக்கொண்ட பிரான்ஸ் அணி பதில் தாக்குதலில் இறங்கியது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே ஆக்ரோஷமாக விளையாடி 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது 22-வது கோலை பதிவு செய்த எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார். பிரான்ஸ் அணி கடைசி வரை கடுமையாகப் போராடி மேலும் 2 கோல்களை அடித்த போதிலும், இங்கிலாந்தின் கோல் மழையை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இறுதியில் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த த்ரில்லிங் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 6-4 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 3-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு சுமார் ரூ.279 கோடியும், 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பிரான்ஸ் அணிக்கு ரூ.260 கோடியும் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version