தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், “லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம்” என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொழில்துறையினருடன் முக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொழில் மற்றும் வணிக சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோவையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொழில்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “லஞ்சம், ஊழலற்ற அரசு நிர்வாகத்தை உருவாக்கினாலே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்கு தொழில்துறையினர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அமைச்சரின் நண்பர், உறவினர் என்று யார் வந்தாலும் அவர்களை தள்ளி வைக்க வேண்டும். எங்கள் பெயரைச் சொல்லி யாரும் எந்த சலுகையும் பெற முடியாது” என்று தெளிவுபடுத்தினார். மேலும், “10 நாட்கள் வேலை 2 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்லக் கூடாது” என்றும் அவர் எச்சரித்தார்.

தொழில்துறையினர் சார்பில், கோவையில் கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, ஒண்டிப்புதூர் பகுதியில் திட்டமிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றுதல், மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல், புறவழிச் சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அமைச்சர் இதற்கு உறுதியளித்து, “முதலமைச்சர் ஜோசப் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவாணி அணையை சீரமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் சீர்படுத்தப்படும்.

மேற்கு புறவழிச்சாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். லாஜிஸ்டிக் பார்க், மூலப்பொருள் வங்கி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஐடி மற்றும் ஏஐ துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார். இந்த சந்திப்பு, தவெக அரசின் ஊழலற்ற மற்றும் வளர்ச்சி மையப்படுத்திய நிர்வாகத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version