ஈரானின் குஸெஸ்தான் மாகாணத்தில் உள்ள அபாதான் நகரின் புறநகர் பகுதி மீது ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சி IRIB-க்கு பேட்டியளித்த குஸெஸ்தான் மாகாண துணை பாதுகாப்பு மற்றும் காவல் அதிகாரி வலியுல்லா ஹயாத்தி, “அபாதான் நகர எல்லைக்கு வெளியே உள்ள ஒரு பகுதி மீது அமெரிக்கா என்ற பயங்கரவாத எதிரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்றார்.

இதற்கிடையில், குஸெஸ்தான் மாகாணத்தில் கட்டுமானத்தில் உள்ள டார்கோவின் அணுமின் நிலையம் மீதும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு (AEOI) குற்றம்சாட்டியுள்ளது.

AEOI வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அமெரிக்கா டார்கோவின் அணுமின் நிலைய கட்டுமானத் தளத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இது ஈரான் மக்களின் அறிவியல் தன்னிறைவு மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக விளங்கும் திட்டமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான்–அமெரிக்கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) இனி பின்பற்றப் போவதில்லை என்ற ஈரானின் அறிவிப்பு குறித்து “எனக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, குஸெஸ்தான் மாகாணத்தின் அஹ்வாஸ் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமனேய், அமெரிக்காவை “மகா சாத்தான்” என்று விமர்சித்ததுடன், மேற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் கனவு இனி நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு இலக்குகள் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் படை (CENTCOM) தொடர்ந்து எட்டாவது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, ஜோர்டானில் ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததையும், ஒருவர் மாயமானதையும் தொடர்ந்து இந்த ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version