சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் அமைப்பு ரீதியிலான 85 மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றுவது தொடர்பாகவும் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன.
இதற்கிடையே, கட்சியில் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவரும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளின் பதவிகளைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியில் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்தவும், எதிர்ப்புகளைச் சமாளிக்கவும் அதிருப்தியாளர்களின் பதவிகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை முடித்த பின்பு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அதிமுக செயற்குழுவைக் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
